top of page

உலகம் உன்னைப் பார்த்து

உன்னைப் பார்த்து உலகம்

உரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே !


இரட்டைப் பேச்சு பேசும்

உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே !


ஒவ்வொரு வாயிலும்

ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு !


எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்கு சொல்கிறேன்

உள்ளத்தில் எழுது !


இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை

லேகியம் என்றது !


திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்

பரிமேலழகரை

வரச்சொல் என்றது !


குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்

குண்டுச் சட்டியில்

குதிரை என்றது !


எலியட், நெருடா எல்லாம் சொன்னேன்

திறமை எல்லாம்

திருடியதென்றது !


எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி

வழியுது என்றது !


அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்

கழுதைக் கெதற்கு

கண்மை என்றது !


மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்

படித்த திமிர்தான்

பணிவில்லை என்றது !


மூத்தோர் வந்ததும் முதலில் எழுந்தேன்

கவிஞன் அல்ல

காக்கா என்றது !


உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில் பூ வைக்கிறான்

கவனம் என்றது !


விரல்நகத்தளவு விமர்சனம் செய்தேன்

அரிவாள் எடுக்கிறான்

ஆபத்து என்றது !


மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்

புத்தி கொழுத்தவன்

புதைந்தான் என்றது !


மூச்சுப் பிடித்து முட்டி முழைத்தேன்

தந்திரக்காரன்

தள்ளிநில் என்றது !


பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்

பயந்துவிட்டான்

பாவம் என்றது !


மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்

விளங்கிவிட்டதா ?

மிருகம் என்றது !


பணத்தில் பொருளில் பற்றற்று இருந்தேன்

வறுமையின் விந்துவில்

பிறந்தவன் என்றது !


என்னை தேய்த்து மண்டபம் கட்டினேன்

புலவன் இல்லை

பூர்ஷ்வா என்றது !


சொந்த ஊரிலே துளிநிலம் இல்லை

இவனா ?

மண்ணின் மைந்தன் என்றது !


தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்

பண்ணையார் ஆனான்

பாமரன் என்றது !


கயவர் கேட்டார் காசு மறுத்தேன்

கறக்க முடியா

கஞ்சன் என்றது !


உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்

உதறித்திறியும்

ஊதாரி என்றது !


மங்கயரிடையே மௌனம் காத்தேன்

கவிஞன் என்ற

கர்வம் என்றது !


பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன்

கண்களை கவனி

காமம் என்றது !


திசைகள்தோறும் தேதி கொடுத்தேன்

ஐயோ புகழுக்கு

அலைகிறான் என்றது !


நேரக்குறைவு நிறுத்திக்கொண்டேன்

கணக்குப் பார்க்கிறான்

கவிஞன் என்றது !


அப்படி இருந்தால் அதுவும் தப்பு ,

இப்படி இருந்தால்

இதுவும் தப்பு .


கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்து

தானே குரைக்கும் .


உலகின் வாயைத் தைத்திடு அல்லது

இரண்டு செவிகளை

இறுக்கி மூடிடு !


உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகளை

மூடுதல் சுலபம்...............................

Comments


Tags

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page